வட கொரியா செல்லும் புடினின் முடிவு : அமெரிக்கா, தென் கொரியா அதிருப்தி


வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டுள்ளதாாக வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

புடின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டாலும், கிரெம்ளினிடமிருந்து உடனடியாக உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்குப் பின், புடின் அரிதாகவே வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தப்பயணம் தொடர்பான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

  முக்கியமான உச்சிமாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை வட கொரியாவுக்கு அழைப்பதற்கான ஏற்பாடுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

ஒருவருக்கொருவர் "நண்பர்கள்" என்று அழைத்த இரு தலைவர்களும் நேற்று(13) ரஷ்யாவின் மிக நவீன விண்வெளி ஏவுதளத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

"பேச்சுவார்த்தையின் முடிவில், கிம் ஜோங் உன் வட கொரியாவுக்கு வருகை தருமாறு புடினுக்கு அழைப்பு விடுத்தார்.

"புடின் இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டதுடன், ரஷ்ய - வட கொரியா நட்பின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை எப்போதும் முன்னெடுத்துச் செல்வதற்கான தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார்" என்று கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது.

கிம் மற்றும் புடினுக்கு இடையே வளர்ந்து வரும் நட்பால் ஆயுதங்கள் கடத்தப்பட்டால் மேலும் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், தென் கொரியாவும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.